சிலிக்கான் சிட்டி பெங்களூருவில் கன்னடம் தவிர பிற மொழி பேசும் மக்களும் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியில்தான் பேசுகின்றனர். குறிப்பாக வாடகை ஆட்டோ, கார்களை அழைக்கும்போது தாய் மொழியைத்தான் பயன்படுத்துகின்றனர். இதேபோல வணிக வளாகங்கள், கடைகளிலும் தாய் மொழியில்தான் பேசுகின்றனர். மேலும் அவர்கள் கன்னட மொழியில் பேசுவதற்கு ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பயணிகளை கன்னட மொழியில் பேச ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதாவது தனது ஆட்டோவில் டிரைவர் இருக்கையின் பின்புறம் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடல் தொடர்பான வாசகங்கள் அச்சிட்ட பதாகை ஒன்றை வைத்துள்ளார்.
அதில் ஆட்டோ பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் உரையாடல் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் இடம் பெற்றுள்ளன. அதை ஆட்டோ பயணிகள் பயன்படுத்தி பேசும்படியும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பேசும்போது, கன்னட மொழியை எளிதாக கற்று கொள்ளலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த கன்னட உரையாடல் பதாகை தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதற்கு பொதுமக்கள் பலரும் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனர்.