மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் அருகே உள்ள மவுலா பகுதியை சேர்ந்தவர் பச்சு சவுத்ரி. இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு பெரிய டிரம்முடன் ஸ்கூட்டர் ஷோரூமுக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் எனது மகளுக்கு புது ஸ்கூட்டர் வேண்டும் என கூறிய அவர், அதற்கான தொகையாக நான் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த நாணயங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர். 2 மணிநேரமாக நடந்த நாணயங்கள் எண்ணும் பணியின் முடிவில் மொத்தத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நாணயங்கள் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்டு ஸ்கூட்டர் வழங்கினர்.
இதுகுறித்து பச்சு சவுத்ரி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார். அப்போது அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நாணயங்கள் சேகரிக்க தொடங்கினேன். தற்போது அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றார்.