இந்தியா

கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது கனரா, பரோடா வங்கிகள்

வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களை வாங்கியவர்கள் அதிகமான மாதாந்திர தவணைகளை எதிர்கொள்வார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கிகளின் வட்டி விகிதம் மாற்றம்:

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கிகள் தங்களின் விளிம்பு நிலை செலவு அடிப்படையிலான கடன் வழங்கும் வட்டி விகிதங்களை (MCLR) 5 புள்ளிகள் உயர்த்தி உள்ளன.

கனரா வங்கியின் ஓவர்நைட் MCLR 7.90%-லிருந்து 7.95%-ஆகவும், பேங்க் ஆஃப் பரோடாவின் MCLR 7.80%-லிருந்து 7.85%-ஆக மேல்நோக்கித் திருத்தப்பட்டுள்ளது.

MCLR என்றால் என்ன:

MCLR என்பது ஒரு நிதி நிறுவனம் குறிப்பிட்ட கடனுக்கு வசூலிக்க வேண்டிய குறைந்தபட்ச வட்டி விகிதமாகும். இது ஒரு கடனுக்கான வட்டி விகிதத்தின் கீழ் எல்லையை நிர்ணயிக்கிறது. MCLR-ஐ இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2016-ல் அறிமுகம் செய்திருந்தது.

பாதிப்புகள் விவரம்:

தற்போது திருத்தப்பட்டுள்ள புள்ளிகள்மூலம் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனி நபர் கடன், கல்விக் கடன் வாங்கியவர்கள் அதிகமான மாதாந்திர தவணைகளையோ (EMI) அல்லது நீட்டிக்கப்பட்ட கடன் காலங்களையோ எதிர்கொள்வார்கள்.

பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கனரா வங்கிகளின் உள்நிதிச் செலவு அதிகரித்ததாலும் மேலும் இறுக்கமான பணப்புழக்கச் சூழல்கள் இருப்பதாலும், வங்கிகள் தங்களின் MCLR-ஐ அதிகரித்துள்ளன.

வங்கி அமைப்பிற்குள் அதிகரித்து வரும் நிதியளிப்பு செலவுகளை பிரதிபலிக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 5.25% நிர்ணயம் செய்திருந்தது.

இந்நிலையில் இரண்டு வங்கிகளின் திருத்தம் செய்யப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூன் 12, 2026 முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.