இந்தியா

2 நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா

ஷேக் ஹசீனா இந்தியா வருவது இது 2-வது முறையாகும்.இரு நாடுகளிடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

அண்டை நாடான வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா 2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். டெல்லியில் இன்று மாலை அவரை இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் உற்சாகமாக வரவேற்றார்.

இன்று மாலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசுகிறார்.

நாளை காலை ஷேக் ஹசீனா பிரதமர் மோடியை சந்திக்கிறார். அப்போது இரு நாட்டு நல்லுறவு குறித்தும், இந்தியா, வங்காளதேசம் இடையே கடல் எல்லை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் விரிவாக விவாதிக்க உள்ளனர். அதன்பின் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் ஷேக் ஹசீனாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவர் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மற்றும் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

நாளை மாலை அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வங்காளதேசம் திரும்புகிறார்.

ஷேக் ஹசீனா இந்த மாதத்தில் இந்தியா வருவது இது 2-வது முறையாகும். கடந்த 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.