இன்றைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், சில வீடியோக்கள் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இந்த நிலையில், கேரளம் மாநிலம் மலப்புரத்தில் பெற்றோரின் அலட்சியத்தால் சாலைக்கு தவழ்ந்து வந்த கைக்குழந்தை பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியதால் உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோவில், வீட்டின் வரண்டாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த பெற்றோரின் அலட்சியத்தால் வீட்டில் இருந்து தவழ்ந்து, தவழ்ந்து ஒரு வயது கூட ஆகாத கைக்குழந்தை ஈரமாக உள்ள வளைவான சாலையின் நடுவே அமர்ந்து உள்ளது. இதனிடையே தனியார் பேருந்தை வேகமாக ஓட்டிய வந்த ஓட்டுநர் சட்டென்று சாதுர்யமாக சுதாரித்து பேருந்தை நிறுத்தினார்.
இதனை தொடர்ந்து, பேருந்தின் நடத்துநர் உடனடியாக கீழே இறங்கி குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவை கண்ட பயனர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் சாமர்த்தியமான நடவடிக்கை இல்லையென்றால், நிலைமை மோசமாகியிருக்கக்கூடும் என்றும் அக்குழந்தையின் பெற்றோரை வசைபாடியும் வருகின்றனர்.