இந்தியா

ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

இந்த பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.

சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக, 50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த 49 ஆண்டுகளாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் பணியில் மெட்ராஸ் முதலை வங்கி செயல்பட்டு வருகிறது. 50-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மூன்று முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள்:

அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஆகஸ்ட் 2027 வரை, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமை மெட்ராஸ் முதலை வங்கிக்கு வருகை தரும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இதேபோல், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சார்பில் குழுவாக வருகை தரும் மாணவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகைகளும் வழங்கப்படவுள்ளன.

இதனுடன், இந்தியாவிலேயே முதல்முறையாக ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து நாடு தழுவிய மிகப்பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மெட்ராஸ் முதலை வங்கி அறிவித்துள்ளது. மெட்ராஸ் முதலை வங்கி மற்றும் The Reptile Conservancy Alliance இணைந்து ‘Save The Reptiles’ என்ற பெயரில் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்க உள்ளன.

இந்த விழிப்புணர்வு பயணம் டிசம்பர் 2026 வரை சுமார் 120 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த பயணத்தில் 22 மாநிலங்கள் வழியாக சுமார் 15,000 கிலோமீட்டர் தூரம் கடக்கப்படவுள்ளது.

நாடு தழுவிய விழிப்புணர்வு:

பயணத்தின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாநில வனத்துறை அதிகாரிகள், வன உயிரின ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

50-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த சிறப்புமிக்க தருணத்தில், ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு தொடங்குவதில் மெட்ராஸ் முதலை வங்கி மகிழ்ச்சி தெரிவித்தது.

49 ஆண்டுகால அர்ப்பணிப்பான பயணத்தை நிறைவு செய்து 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெட்ராஸ் முதலை வங்கி, ஊர்வன உயிரினங்களின் பாதுகாப்பில் தனது அடுத்த அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ‘Save The Reptiles’ மூலம் நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் மிகப்பெரிய பயணத்தையும் முன்னெடுக்கிறது.