இந்தியா

வலது கை கொடுப்பது, இடது கைக்கு தெரிய கூடாது... மென்பொருள் வல்லுனரை நெகிழ வைத்த ஆட்டோ டிரைவரின் செயல்

சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன்.

இன்றைய அவசரமான காலத்தில் எதிரில் வருபவர்களை கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதனால் பல நேரங்களில் நம்முன்னே நடைபெறும் குற்றச்சம்பவங்களை கூட தட்டிக்கேட்க முடியாத நிலையில் உள்ளோம். இதற்கு உதாரணமாக சமீபத்தில் இரவு நேரத்தில் நடு ரோட்டில் கணவருக்கு உயிருக்கு போராடுவதை கண்டு உதவி கோரிய பெண்ணுக்கு யாரும் உரிய நேரத்தில் உதவாததால் கணவர் இறந்தது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் மனித நேயம் என்ன ஆனது? என வினா எழுப்பி வருகின்றனர். இதனிடையே சிலர் செய்யும் உதவிகள் தொடர்பான வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இங்கே ஒருவர், தாம் செய்த உதவி பெரிதாயினும் அதனை வெளிக்காடாமல், பாராட்டையும் எதிர்பாராமல் உள்ளது நெகிழச் செய்துள்ளது.

லிங்க்டுஇன் வலைத்தளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளாரான உத்யா படேல் என்பவர் பகிர்ந்துள்ள பதிவில், ரேபிடோவில் ஆட்டோவை புக் செய்து பயணித்த போது ஆச்சரியப்பட்டேன். அதாவது அவர் பயணித்த ஆட்டோவில், எங்கள் வாடிக்கையாளருக்கு இலவசம் என்று கூறி குடிநீர், டிஷ்யூ பேப்பர், கை சுத்திகரிப்பான் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு 5 கி.மீ. வரை இலவசம் என்று கூறி நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இருக்கைக்கு அருகில் செயற்கையான பூக்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து எதுவும் கூறாத ஆட்டோ டிரைவர் பாராட்டையும் எதிர்பார்க்காமல் மனித நேயம் அவரது வழக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பது போல அவர் ஆட்டோவை ஓட்டிச் சென்றார் எனக்குறிப்பிட்டுள்ளார்.

உத்யா படேலின் பதிவை பார்த்த ரேபிடோ நிறுவனம் மற்றும் சமூக வலைத்தள பயனர்கள் அந்த ஆட்டோ டிரைவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.