இந்தியா

அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 84 ஆக உயர்வு

கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர்.27 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான நிலை நீடித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

அசாமில் மழை வெள்ளத்திற்கு நேற்று முன்தினம் வரை 79 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கிற்கு மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். வெள்ளம் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையை 84 ஆக உயர்ந்துள்ளதாக அசாமின் பேரிடர் மற்றும் தகவல் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

27 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,580 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. 365 நிவாரண முகாம்களில் மொத்தம் 1,57,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் நேமாதிகாட், தேஜ்பூர், கவுகாத்தி மற்றும் துப்ரி ஆகிய இடங்களில் அபாய அளவை தாண்டி பாய்ந்து வருகிறது.