126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கு ஏப்.9ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. முடிவுகள் தமிழ்நாட்டைப் போல மே.4ஆம் தேதி வெளியாகிறது.
அசாமில் தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ளது. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மறுபுறம் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பிரதான எதிர்க்கட்சிகளாகப் போட்டியிடுகின்றன. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.
இதில் ஐந்து முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. ஆட்சிக்கு வந்தால் அவை நிச்சயம் செயல்படுத்தப்படும் என்று நௌபோச்சாவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.
அதன்படி,
அனைத்து பெண்களுக்கும் நிபந்தனையற்ற மாதாந்திர ரொக்க உதவி வழங்கப்படும். மேலும், பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க ரூ.50,000 உதவி வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.25 லட்சம் வரையிலான கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
10 லட்சம் பழங்குடியின மக்களுக்கு நிரந்தர நிலப்பட்டாக்கள் வழங்கப்படும்.
மாநிலத்திலுள்ள அனைத்து முதியோர்களுக்கும் மாதம் ரூ.1,250 உதவித்தொகை வழங்கப்படும்.
அசாம் பாடகர் ஜூபீன் கார்க் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நீதி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.