இந்தியா

பிரதமர் மோடி முன்னிலையில் 2-வது முறையாக அசாம் முதல்வராக பதவியேற்ற ஹிமாந்தா பிஸ்வா சர்மா

ஹிமாந்தா, 2015இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானவர் ஆவார்.

அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 126 இடங்களில் 102 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாகத் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக மட்டும் தனித்து 82 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 21 இடங்களில் வென்றுள்ளது.

முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் இது இரண்டாவது வெற்றி ஆகும். ஹிமாந்தா தனது ஜலுக்பாரி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் இன்று அசாம் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றார்.

அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள கால்நடை கல்லூரி வளாகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, ஹிமாந்தாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் அஜந்தா நியோக், ராமேஸ்வர் தெலி, அதுல் போரா, சரண் போரா ஆகிய 4 வெற்றி வேட்பாளர்களும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

மத்திய அமைச்சர்கள் சார்பானந்தா சோனோவால், சிவராஜ் சிங் சவுகான், ஜோதிராதித்ய சிந்தியா, சிராக் பஸ்வான் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இரண்டாவதை முறையாக அசாம் முதல்வராக பதவியேற்ற ஹிமாந்தா, 2015இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானவர் ஆவார்.

கடந்த 2021 முதல் 2026 வரையிலான ஆட்சி காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் மியா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக கடும் விமர்சனத்துக்கு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.