தளபதி நரவானே 
இந்தியா

முப்படை தளபதிகளின் குழு தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமனம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த நிலையில், தற்போது நரவானே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக இருந்த பிபின் ராவத் கடந்த 8-ந்தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். கோவை வெலிங்டன் பயிற்சி மையத்தில் இருந்து குன்னூருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது பிபின் ராவத், அவரது மனைவி உள்பட ஹெலிகாப்டரில் பயணம செய்த 14 பேரும் உயிரிழந்தனர்.

பிபின் ராவத் மறைவையடுத்து அடுத்த இந்திய முப்படை தலைமைத் தளபதியாக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி இருந்து வருகிறது. இதில் ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை தளபதி விவேக்ராம் சவுத்ரி ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது.

இந்த நிலையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக ராணுவ தளபதி எம்.எம். நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் முப்படைகளின் தலைமை தளபதி தேர்வு செய்யப்படும் வரை முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிபின் ராவத் மறைவையடுத்து இடைக்கால ஏற்பாடாக முப்படை தளபதி குழுத்தலைவராக நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இந்திய முப்படை தலைமை தளபதியாக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.