இந்தியாவில் ஏப்ரல் மாதத்தின் ஜிஎஸ்டி வசூல் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 8.7% அதிகரித்து, சுமார் ரூ.2.43 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.2.23 லட்சம் கோடியாக பதிவாகியிருந்தது.
மொத்த உள்நாட்டு வருவாய், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4.3% உயர்ந்து ரூ.1.85 லட்சம் கோடியாக உள்ளது. மத்திய ஜிஎஸ்டி ரூ.52,140 கோடியும், மாநில ஜிஎஸ்டி ரூ.61,331 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.29 லட்சம் கோடியாகவும் உள்ளது.
இறக்குமதி மூலம் கிடைத்த வரி வருவாய் 25.8% வரை உயர்ந்ததே இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம், இந்தியாவின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.2,00,064 கோடியாக இருந்தது. இது, மார்ச் 2025-ல் வசூலாகி இருந்த ரூ.1,83,845 கோடியுடன் ஒப்பிடும்போது 8.8% அதிகமாகும்.
ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகையைக் கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 7.3% அதிகரித்து சுமார் ரூ.2.11 லட்சம் கோடியாக உள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்கள் வலுவான வருடாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.