ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா, ராஜ்நாத்சிங், மோடி 
இந்தியா

ரஷியா மீதான எந்தவொரு தடையும், இந்தியாவுடனான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்- மத்திய அரசு தகவல்

உக்ரைன் தலைநகரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களை சென்றடையும் சாலைகள் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புத்துறைக்கான மத்திய அமைச்சரவையின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் குறித்து,  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் உள்ளிட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த அவசர கூட்டம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா 

தெரிவித்துள்ளதாவது:

ரஷ்யா மீது இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சில தடைகளை விதித்துள்ளன. இந்த தடைகள் நமது நலன்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் பார்க்க வேண்டும். 

எந்தவொரு தடைகளும் எங்கள் (இந்தியா-ரஷியா) உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும், அதை ஒப்புக்கொள்வது சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்: 

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து இந்தியர்கள் வெளியேறவும், பாதுகாப்பான இடங்களை அடையவும் சாலைகள் வரையப்பட்டுள்ளன. 

உக்ரைனின் நிலைமை குறித்து, விமானப் போக்குவரத்து திறனைப் பராமரிக்க, பாதுகாப்பு அமைச்சகத்துடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.

உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கான செயல்பாட்டில் நாங்கள் பல்கலைக்கழகங்கள், மாணவர் ஒப்பந்த தாரர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிந்த அனைத்து உதவியையும் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப் பிட்டுள்ளார். 

உக்ரைனில் உருவாகி வரும் சூழ்நிலையை சமாளிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் உக்ரைனில் இருந்து 4000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர். 

போலந்து, ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் (இந்திய)வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்துவார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்கள்- அரசு அறிவிப்பு