ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியதாக ஒரு பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பாலகிருஷ்ணா தனது விவசாய நிலத்திற்குச் சென்றபோது, அங்கு வந்த அவரது மனைவி மற்றும் ரபி ஆகிய இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொலையை மறைப்பதற்காகப் பாலகிருஷ்ணாவின் உடலை ஒரு கோணிப்பையில் கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர்.
மறுநாள் காலை கிணற்றில் உடல் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பாலகிருஷ்ணாவின் மனைவி மற்றும் ரபி ஆகியோர் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
தற்போது போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.