இந்தியா

தலைமை செயலகம் முற்றுகையிடும் போராட்டம்: ஒய்.எஸ்.ஷர்மிளா கைது

விஜயவாடாவில் ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி:

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைத்தனர்.

இதற்கிடையே, ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் கன்னவரம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் அம்பாபுரத்தில் உள்ள முன்னாள் எம்பி ராமச்சந்திர ராவ் வீட்டிற்கு செல்ல காரில் புறப்பட்டு வந்தார். அப்போது போலீசார் ஷர்மிளாவின் காரை பின்தொடர்ந்தனர். இதையடுத்து, ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் தங்கினார்.

இந்நிலையில், விஜயவாடாவில் இருந்து கட்சி தொண்டர்களுடன் புறப்பட்ட ஒய்.எஸ்.ஷர்மிளாவை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது தொண்டர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.