அமராவதி:
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் பிரசாரத்துக்காக ரோடு ஷோ நடத்தினார். சிங் நகர் தாபா கோட்லா மையத்தில் நடந்த ரோடு ஷோவில் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபரின் கல்வீச்சு தாக்குதலில் ஜெகன்மோகன் காயமடைந்தார்.
இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் இடது புருவத்தில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு அருகிலிருந்த டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தாக்குதலில் முதல் மந்திரி அருகிலிருந்த எம்.எல்.ஏ. வெள்ளம்பள்ளியின் இடது கண்ணிலும் காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு ஜெகன் மோகன் ரெட்டி தனது பேருந்து யாத்திரையைத் தொடர்ந்தார்.
இந்த தாக்குதலின் பின்னணியில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இருப்பதாக விஜயவாடா ஒய்.எஸ்.ஆர்.சி.பி. தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர முதல் மந்திரி மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல் மந்திரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.