இந்தியா

'ரேடியோ ஹரிவராசனம்' என்ற பெயரில் ஆன்லைன் ரேடியோ சேவை- தேவசம்போர்டு ஏற்பாடு

ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும்.வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பு வெளியீடு.

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் அடுத்தமாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.

பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் ரேடியோ சேவையை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தொடங்க உள்ளது. 

"ரேடியோ ஹரிவராசனம்" என்ற பெயரில் அந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது. இது 24 மணி நேரமும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அய்யப்ப பக்தர்கள் உலகம் முழுவதும் எங்கிருந்தாலும் கேட்கக்கூடிய வகையில் இந்த ஆன்லைன் ரேடியோ தொடங்கப்படுகிறது.

ஆன்லைன் ரேடியோ ஒலிபரப்பு சன்னிதானத்தில் இருந்து செய்யப்படும். இதில் வழிபாடுகள், பக்தி பாடல்கள், கோவில் விழாக்களின் நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் சபரிமலையின் வரலாறு பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும்.

மேலும், கோவில் மற்றும் அதன் பாரம்பரியங்கள் தொடர்பான நேர்காணல்கள் மற்றும் பேச்சுகளும் ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வானொலி நிலையத்தை நடத்துவதற்கான டெண்டர் தொடர்பான அறிவிப்பை திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டிருக்கிறது.

SCROLL FOR NEXT