திருப்பதி:
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டம், தசர குடேமை சேர்ந்தவர் சித்தைய்யா (வயது 45). இவருக்கு வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. சித்தைய்யா விவசாய நிலத்துக்கு சென்றார்.
இவரது விவசாய நிலத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் சுற்றி திரிந்தது.
சித்தையா விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தபோது கூட்டத்தில் இருந்து யானை ஒன்று பிரிந்து வந்தது. சித்தைய்யா நிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. இதனைக் கண்ட அவர் யானையை விரட்ட முயற்சி செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த யானை சித்தய்யாவை துரத்தியது. யானை விரட்டுவதை அறிந்த அவர் அதனிடமிருந்து தப்பித்து ஓடினார். விடாமல் துரத்திய யானை சித்தைய்யாவை தூக்கி போட்டு காலால் மிதித்து கொன்றது. வனத்துறையினர் அவருடைய உடலை மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் அறிவித்தார்.