புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் மாத்ரு சக்தியுடன் நாங்கள் நிற்கிறோம் என்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது.
காங்கிரசிடம் நான் கேட்க விரும்புவது அங்கு யாருடைய ஆட்சி நடைபெறுகிறது? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அவர்கள் ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
இது மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை என்பதால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. மாநில அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசாரணைக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம் என எங்கள் கூட்டாளியான மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இன்று அவர்களது குழு கூட்டம் கூடி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.