இந்தியா

Amit Shah | "பயங்கரவாதி என்பதா? நாட்டிற்கே அவமானத்தை சேர்த்துள்ளார்..." கார்கேவை சாடிய அமித் ஷா

மோடி-ஜியை நேசித்து ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.

சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியை 'பயங்கரவாதி' என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குறிப்பிட்டதைத் தொடர்ந்து, அவர் "பொது நடத்தைக்கான ஒவ்வொரு நெறிமுறையையும் மீறி, நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு நாளும், காங்கிரஸ் தனது நடத்தையில் புதிய தாழ்நிலைகளை எட்டி, பொது விவாதத்தின் தரத்தை குறைப்பதில் தனது முந்தைய சாதனையை முறியடித்து வருகிறது. நாட்டின் தலைசிறந்த தலைவருக்கு இழைக்கப்படும் இந்த அவமதிப்பு, மோடிஜியை நேசித்து ஆதரிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும்.

கடந்த 12 ஆண்டுகளில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழித்த மோடிஜி போன்ற ஒரு தலைவரை பயங்கரவாதி என்று அழைப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் மோடிஜியைத் திட்டித் தீர்க்கும்போது, ​​இந்திய மக்கள்தான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்கள். இந்த முறையும், மக்கள் பதிலடி கொடுப்பார்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் அ.தி.மு.க.வின் முடிவை கேள்விக்குள்ளாக்கியபோது கார்கே இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

திராவிட மற்றும் தலித் அரசியல் ஆளுமைகளின் மரபுகளை நினைவு கூர்ந்த அவர், "அண்ணாதுரையின் புகைப்படத்தையே வெளியிட்ட இந்த அ.தி.மு.க.வினர், எப்படி மோடியுடன் சேர முடியும்? அவர் ஒரு பயங்கரவாதி. அவரது கட்சி சமத்துவத்தையும் நீதியையும் நம்பாது. இந்த மக்கள் அவர்களுடன் இணைகிறார்கள் என்றால், அவர்கள் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறார்கள், அண்ணாதுரை, காமராஜ், பெரியார், கலைஞர், பாபா சாகேப் அம்பேத்கர் ஆகியோரின் தத்துவத்தை பலவீனப்படுத்துகிறார்கள்," என்றார்.

தான் சொன்ன கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மல்லிகார்ஜூன ​​கார்கே தான் கூறிய வார்த்தைகளின் நேரடி பொருளைத் திரும்பப் பெற்றார்.

"அவர் மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்துகிறார். அவர் ஒரு பயங்கரவாதி என்று நான் ஒருபோதும் கூறவில்லை. நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவென்றால், மோடி எப்போதும் அச்சுறுத்துகிறார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ. போன்ற நிறுவனங்கள் அவர் கைகளில் உள்ளன. அவர் தொகுதி மறுவரையறையையும் தன் கையில் எடுக்க விரும்புகிறார். எனவே, அந்த சூழலில்தான், அவர் மக்களையும் அரசியல் கட்சிகளையும் அச்சுறுத்துகிறார் என்று கூறினேன்," என்றார்.