திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தேவஸ்தானம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர ரெட்டி நேற்று திருப்பதி மலைக்கு வந்தார். இதனால் மலை அடிவாரத்தில் உள்ள சோதனை சாவடியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது காரில் வந்த பூமண கருணாகர ரெட்டி, எம்.பி. குருமூர்த்தி அவரது மகன் அபிநய ரெட்டி ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது திருப்பதி மலையில் ஆத்திரமூட்டும் வகையில் அரசியல் எதுவும் பேசக்கூடாது என விதிமுறை உள்ளதாக போலீசார் நோட்டீஸ் அளித்தனர். தான் எந்த அரசியலும் பேச வரவில்லை, சாமியை தரிசிக்க வந்துள்ளதாக போலீசார் கொடுத்த நோட்டீசில் பூமண கருணாகர ரெட்டி கையெழுத்திட்டார். பின்னர் போலீசார் அவரை மலைக்குச் செல்ல அனுமதித்தனர்.
திருப்பதி மலைக்கு வந்த பூமண கருணாகர ரெட்டி நேராக வராக சாமியை தரிசனம் செய்தார். பின்னர் புஷ்கரணிக்கு சென்று நீராடி விட்டு மாட வீதி வழியாக கோவில் முன்பாக வந்த அவர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டபடி கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.
அப்போது அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. நெய்யில் கலப்படம் செய்து இருந்தால் என்னுடைய குடும்பம் ரத்த வெள்ளத்தில் அழிந்து போய் இருக்கும் என கூறியபடி கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார். மேலும் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் நெருப்பில் இருப்பது போல் உணர்கிறேன். கோவிலில் கேவலமான அரசியல் மனம் கொண்டவர்கள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்.
சுத்தப்படுத்த வேண்டியது ஏழுமலையான் கோவிலை அல்ல. முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் நாக்கை தான் சுத்தபடுத்த வேண்டும் என்றார். இதனால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி மலை மீது அரசியல் மற்றும் அவதூறு பேசக்கூடாது என நோட்டீசில் தெரிவித்திருந்தும் விதிமுறை மீறி பேசியதாக போலீசார் தெரிவித்தனர்.
பூமண கருணாகர ரெட்டி மீது பக்தர்களின் மனதை புண்படுத்தியது, அநாகரிக, அவதூறு அரசியல் பேசியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.