இந்தியா

ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட 5 நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்த ஏர் இந்தியா, இண்டிகோ

நேற்று முதல் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கின.பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளன.

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக 32 விமான நிலையங்கள் வருகிற 15-ந்தேதி வரை தற்காலிகமாக மூடப்படும் என்று கடந்த வாரம் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்தது. இதனிடையே, இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்ததை தொடர்ந்து நேற்று முதல் விமான நிலையங்கள் செயல்பட தொடங்கின.

இந்த நிலையில் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், ராஜ்கோட் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் இருவழி விமானச் சேவைகளை ஏர் இந்தியா ரத்து செய்துள்ளதாகவும், ஜம்மு, அமிர்தசரஸ், சண்டிகர், லே, ஸ்ரீநகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இண்டிகோ ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை கருதியும், நிலைமையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்த விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாகவும் தெரிவித்துள்ளன. 

SCROLL FOR NEXT