இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு

2023ல் இஸ்ரோ சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பியதுஆதித்யா-எல்1 விண்கலத்தில் ஆராய்ச்சிக்காக 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளன

மாலை மலர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) சென்ற வருடம், நிலவிற்கு சந்திரயான் எனும் விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி வைத்தது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சூரியன் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி ஏவுதளத்திலிருந்து ஆதித்யா-எல்1 எனும் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

சூரியனின் செயல்பாடுகளையும் வானிலையில் சூரியன் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்ய ஆதித்யா-எல்1 அனுப்பபட்டுள்ளது.

இதற்காக இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள 7 உயர் தொழில்நுட்ப சாதனங்கள் செயல்படும்.

இந்த விண்கலத்தை பூமியிலிருந்து புறப்பட்டு 125 நாட்களில் 15 லட்சம் கிலோமீட்டர் தூரம் பயணித்ததும் சூரியனுக்கு அருகே எல் 1 (Lagrange Point 1) எனும் லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்த முயற்சி நடந்தது.

இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

"இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. மனிதகுலம் பயன் பெறும் வகையில் அறிவியலில் புதிய எல்லைகளை அடையும் வகையில் இந்தியா தொடர்ந்து பணியாற்றும். அற்பணிப்புடன் பணியாற்றிய விஞ்ஞானிகளை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என அதில் அவர் தெரிவித்தார்.