அசாமில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறுகையில்:-
விதிவிலக்கான சில சந்தர்ப்பங்களில், ஆதார் அட்டை வழங்குவதற்கான அனுமதியைக் கோரி மாவட்ட ஆணையர், மாநில அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்ப வேண்டும்.
அதன்பிறகு, விண்ணப்பதாரர் ஆதார் அட்டை வாங்குவதற்கு தகுதியானவரா என்பதை அசாம் அரசு முடிவு செய்யும்.
மாநிலத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணி, கிட்டத்தட்ட நிறைவடைய உள்ளது. சில மாவட்டங்களில் 100 சதவீதம் பேர் ஆதார் அட்டை வாங்கிவிட்டனர்.
இதனால் கூடுதல் ஆதார் பெறுபவர்கள் யார் என்பதை நாம் கண்டறிய வேண்டும். சட்டவிரோத வங்கதேசத்தினர் யாரும் ஆதார் அட்டைகளைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இருப்பினும் பலருக்கு இன்னும் ஆதார் அட்டைகள் கிடைக்காமல் இருப்பதால், பட்டியல் சமூகத்தினருக்கும், பழங்குடியினருக்கும், தேயிலைத் தோட்ட சமூகத்தினருக்கும் அவை தொடர்ந்து வழங்கப்படும்.
இவ்வாறு அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா சர்மா கூறினார்.