பெங்களூரு அருகே உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவியிடம் பேராசிரியர் ஒருவர் தனது காதலை கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு நெலமங்கலா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தார்த்த மருத்துவ அறிவியல் கல்லூரியில் ஒரு பேராசிரியர் வகுப்பறையில் மாணவியிடம் தனது காதலை தெரிவித்தார். அந்த மாணவி முன்பே தன்னை காதலிப்பதாக கூறியதாகவும் வகுப்பில் அவர் பேசினார்.
இதற்கு உடனே அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். நான் எப்போது அப்படி சொன்னேன்? என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த விஷயத்தை கல்லூரி முதல்வரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு பேராசிரியர் “நீங்கள் ‘I love you’ என்று சொன்னீர்கள்” என வாதிட்டு, அதற்கு CCTV ஆதாரம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மாணவி பேராசிரியரை செருப்பால் அடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் அவரை தாக்கியுள்ளனர்.
இருப்பினும் இந்த சம்பவம் குறித்து இதுவரை எந்த தரப்பும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.