திருமணமான ஒருவர் வேறொருவருடன் லிவ்-இன் உறவில் இருப்பது குற்றமல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வயது வந்த இருவர் தங்களின் பரஸ்பர சம்மதத்துடன் இணைந்து வாழ்வது சட்டப்படி குற்றமல்ல என்றும், இதற்காக அந்த நபர் மீது எவ்வித கிரிமினல் வழக்கும் தொடர முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
உத்தரப் பிரதேசத்தின் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த திருமணமான நேத்ரபால் என்பவர் தனது மகளுடன் உறவில் இருப்பதாகக்கூறி, அப்பெண்ணின் தாயார் தாக்கல் செய்த குற்றவியல் ரிட் மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்த ஜோடிக்கு எவ்வித இடையூறும் செய்யக்கூடாது என குடும்பத்தினருக்கு உத்தரவிட்டதோடு, அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு வழங்கவும் காவல்துறைக்கு ஆணையிட்டது.
சமூகக் கருத்துகளோ அல்லது தனிப்பட்ட ஒழுக்கநெறிகளோ நீதிமன்றத்தின் சட்டபூர்வமான நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியாது என்று நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா அடங்கிய அமர்வு குறிப்பிட்டுள்ளது.