இந்தியா

மளிகைகடைக்காரருக்கு வந்த ரூ.141 கோடி வருமான வரி நோட்டீஸ்!

தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் நயாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த சுதிர் என்ற நபர் தனது வீட்டில் ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு இந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது கடையில் ரூ.141 கோடிக்கு விற்பனை செய்ததாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் இதுற்குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். 

இதுகுறித்து சுதிர் கூறும்போது, "டெல்லியில் 6 நிறுவனங்களை நிறுவ எனது பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டும் எனக்கு இது போல் ஒரு நோட்டீஸ் வந்தது. அப்போது அந்த நிறுவனங்களுக்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வருமானவரி அதிகாரிகளிடம் விளக்கினேன். தற்போது மீண்டும் நோட்டீஸ் வந்துள்ளது" என்றார்.

மற்றவர்களின் பான் கார்டு விவரங்களை சட்டவிரோதமாகப் பெற்று வங்கிக் கணக்குகளைத் திறக்க, போலி நிறுவனங்களை உருவாக்க, கடன்களைப் பெற அல்லது வரிகளைத் தவிர்க்க அவற்றைப் பயன்படுத்துவது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் வருமான வரி நோட்டீஸ் அல்லது கடன் வசூல் அழைப்புகளை எதிர்கொள்ளும்போதுதான் இந்த மோசடிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.