ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பக்தர்களை ஏற்றிச்சென்ற வாகனம் டேங்கர் லாரியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்னூல் மாவட்டத்தின் தர்மபூர் சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது. லோடு ஆட்டோவில் சுமார் 21 பேர் மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திரா சுவாமி மடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த டேங்கர் லாரியுடன் மோதி விபத்து நேரிட்டது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்கள், 2 ஆண்கள், சிறுமி ஒருவர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, இந்த விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ. 2 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.