தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாச்சுபல்லி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் நான்கு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்கள் ஒடிசா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் இந்த சம்பவம் நேற்று நடந்ததாகவும் பாச்சுபல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளிலும் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பேரழிவு நிவாரணப் படை குழுக்கள், நகரின் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் விழுந்த மரங்களை அகற்றி வருவதாக கிரேட்டர் ஐதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.