தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.
பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.