ஆந்திர மாநிலம் சத்திய சாய் மாவட்டம் கதிரி அடுத்த குமர வஞ்சன பள்ளியே சேர்ந்தவர் வெங்கண்ணா. அவரது சகோதரர் சம்பத். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
சகோதரர்கள் இருவரும் மலைகளில் உள்ள பாறைகளில் டெட்டனேட்டர்களை வெடிக்க வைத்து கற்களை விற்பனை செய்து வந்தனர். இதற்காக வீட்டில் டெட்டனேட்டர்கள், அம்மோனியம் சல்பேட் மற்றும் டீசல் ஆகியவற்றை பதுக்கி வைத்து இருந்தனர். நேற்று மாலை வெங்கண்ணா வீட்டில் பதுக்கி வைத்து இருந்த டெட்டனேட்டர்கள் திடீரென வெடித்தது. இதனைக் கண்ட வெங்கண்ணா குடும்பத்தினரும், சம்பத் குடும்பத்தினரும் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க சென்றனர்.
வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர்கள் மற்றும் அமோனியம் சல்பேட் ஆகியவற்றுக்கு தீ பரவி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் வீடு இடிந்து தரைமட்டமானது. அப்போது தீயை அணைத்துக் கொண்டிருந்த 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களில் 12 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெட்டனேட்டர் பதுக்கிய குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேறிய நிலையில் தீயை அணைக்க சென்று 6 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.