இந்தியா

பெண்களிடையே மது குடிக்கும் பழக்கம் அதிகரிப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள்.டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

புதுடெல்லி :

மது குடிக்கும் பழக்கம் தற்போது ஒரு 'பேஷன்' ஆகி விட்டது. பெருநகரங்களில் பெண்களும் பாருக்கு வருகிறார்கள். இந்தநிலையில் டெல்லியில் பெண்களின் மது பழக்கம், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலையைவிட தற்போது அதிகரித்து உள்ளது. இதற்கு கொரோனா கால ஊரடங்கே முக்கிய காரணம் என பெண்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ஒரு தொண்டு நிறுவனம் இது தொடர்பான ஆய்வை 5 ஆயிரம் பெண்களிடம் நடத்தியது. இதில் கொரோனாவுக்கு பிறகு பெண்களிடையே மது அருந்தும் பழக்கம் 37 சதவீதம் அதிகரித்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களை குடிகாரிகளாக மாற்றிவிட்டதாக பல பெண்கள் கூறியுள்ளனர். மேலும், டெல்லியில் மதுபானத்துக்கு அளிக்கப்பட்ட 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்', சிறப்பு தள்ளுபடி விற்பனை, டோர் டெலிவரி போன்ற சலுகைகளும் மது வாங்க தங்களை தூண்டியதாக 77 சதவீத பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

மது அருந்தும் பெண்களில் 38 சதவீதம் பேர் வாரத்துக்கு இருமுறையும், 19 சதவீதம் பேர் வாரத்துக்கு 4 முறையும் மது அருந்துவதாக கூறியுள்ளனர். ஒரு அமர்வுக்கு 4 'பெக்'குகள் வரை தள்ளுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெண்களிடம் மட்டுமின்றி ஆண்களிடமும் மது அருந்தும் பழக்கம் டெல்லியில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் டெல்லியில் மதுவிற்பனை ஒட்டுமொத்தமாக 87 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. இதில் விஸ்கி விற்பனை 59.5 சதவீதம், பீர் விற்பனை 5.5 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT