மேற்கு வங்க மாநிலம் பஷீர்ஹாட் வடக்கு சட்டமன்றத் தொகுதியில், ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உட்பட 340 முஸ்லீம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
போரோ கோப்ரா கிராமத்தின் 5-வது வாக்குச்சாவடியைச் சேர்ந்த இவர்கள், முன்னர் "சரிபார்ப்பில் உள்ளவர்கள்” என வரைவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், திங்கள் கிழமை வெளியான முதல் துணைப் பட்டியலில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாக்குச்சாவடியின் நிலை அலுவலரான முகமது ஷபியுல் ஆலம்-இன் பெயரும் நீக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஷபியுல் ஆலம்-ன் சகோதரர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து ஷபியுல் பஷீர்ஹட் பிளாக் II-ன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுதொடர்பாக முறையிட்டுள்ளார். ஆனால் இனிமேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று அவர் பதிலளித்தாக கூறியுள்ளார். மேலும் தேர்தல் பதிவு அதிகாரியைத் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் இந்தியர் என்ற அடையாளத்திற்கான 11 ஆவணங்களில் ஒன்றை மட்டுமே கேட்கும் நிலையில், பலர் மூன்று அல்லது நான்கு ஆவணங்களை சமர்ப்பித்தும் அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வாக்காளர்களில் ஒருவரான காஜிருல் மொண்டல் என்பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் குறிப்பிட்ட ஒரு கட்சியை திருப்திப்படுத்துவதற்காக, அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பசிர்ஹாட் இரண்டாம் வட்டாரத்தில் உள்ள பேகம்பூர் பிபிபூர் கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்ட இந்த 5வது வாக்குச்சாவடியில் மொத்தம் 992 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் 38 பெயர்கள் இறப்பு மற்றும் இடமாற்றம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். 358 வாக்காளர்கள் தங்களின் தகுதி குறித்த விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து வரைவுப் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 18 பேரின் பெயர்கள் மட்டும் இடம்பெற, மீதமுள்ள 340 வாக்காளர்கள் 'பரிசீலனையில்' (Under adjudication) வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் துணைப் பட்டியல் வெளியானபோது, அனைவரும் நீக்கப்பட்டோர் (Deleted) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வாக்காளர்கள் படிவங்களை நிரப்புவதற்கு தான் உதவியதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி அனைத்து ஆவணங்களும் பதிவேற்றப்படுவதை உறுதி செய்ததாகவும் ஆலம் அந்த வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் ஆலம் தெரிவிக்கிறார். இருப்பினும், அவர்களது பெயர்கள் மட்டும் தேர்ந்தெடுத்து நீக்கப்பட்டுள்ளன.