இந்தியா

லண்டனில் 26 வயது இந்திய இளைஞர் கத்தியால் குத்திக் கொலை!

உயிரிழந்தவர் பஞ்சாபை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனின் சவுத்தால் பகுதியில் 26 வயது இந்திய வம்சாவளி இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் சவுத்தாலில் உள்ள டார்மர்ஸ் வெல்ஸ் லேன் சந்திப்புக்கு அருகிலுள்ள நார்த் ரோட்டில் நடந்த இந்த சம்பவத்தில் குர்பேஜ் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் இருந்த மற்றொரு இளைஞர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு பின்னர் ஆறு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றொருவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்வதாகவும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலாக இருப்பதாகவும் மெட்ரோபாலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான சரியான காரணம் தெரியாதநிலையில், கொல்லப்பட்ட இளைஞர் பஞ்சாபை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.