உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தானம் பெறப்பட்ட இதயம் வந்தே பாரத் ரெயில் மூலம் 2 மணி நேரத்தில் 250 கி.மீ தூரம் பயணித்து வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள யுஎன் மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்தில் நோயாளி ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டது.
சூரத் நகரில் உள்ள ஒருவரிடம் இருந்து இதயம் தானமாகப் பெறப்பட்டது. அந்த இதயத்தை சுமார் 250 கிலோமீட்டர் தூரமுள்ள அகமதாபாத்துக்கு வந்தே பாரத் ரெயிலில் விரைவாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்காக அகமதாபாத் ரெயில் நிலையத்தில் இருந்து மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்ல சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளில் மருத்துவக் குழுவினர், ரயில்வே துறையினர், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், குஜராத் போலீசார் ஆகியோர் ஈடுபட்டனர்.
இந்த வந்தே பாரத் ரெயில் சூரத் நகரில் இருந்து புறப்பட்டு அகமதாபாத்துக்கு 2 மணி நேரத்தில் ஜெட் வேகத்தில் வந்தடைந்தது.
அகமதாபாத் ரெயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் தானம் பெறப்பட்ட அந்த இதயம், உடனடியாக யுஎன் மேத்தா இதயவியல் ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இதய மாற்று அறுவைச்சிகிச்சை மேற்கொண்டவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
வழக்கமாக சூரத் நகரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரண்டரை மணி நேரத்துக்குப் பிறகே அகமதாபாத் ரெயில் நிலையம் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரெயில்வேயின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது என்றும், இச்சம்பவம் சேவையின் தனித்துவமான உதாரணம் என்றும் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
இது இந்திய ரெயில்வேக்கு ஒரு பெருமை மற்றும் மனநிறைவை அளித்த தருணம். இந்திய ரெயில்வே வரலாறு படைத்துள்ளது. முதல் முறையாக மும்பை சென்ட்ரல் - காந்திநகர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தானமாகப் பெறப்பட்ட ஒரு இதயத்தை சூரத்தில் இருந்து அகமதாபாத்திற்கு வெற்றிகரமாகக் கொண்டு சேர்த்துள்ளது என அகமதாபாத் ரயில்வே கோட்ட மேலாளர் வேத் பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.