இந்தியா

WB Violence | 200 வழக்குகள், 433 பேர் அதிரடி கைது... மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிறகு வேகமெடுக்கும் வன்முறை

1,100 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மே 04-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல், மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 200 முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு, 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை டி.ஜி.பி. சித் நாத் குப்தா தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களில் நேரடியாக தொடர்புடைய 433 பேர் கைது செய்யப்பட்டதோடு, இதுவரை 1,100 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்தார்.

தேர்தலுக்கு பிந்தைய வன்முறைக்கு சற்றும் சகிப்புத்தன்மை காட்டக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு, மேற்கு வங்க தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் மாநிலத்தில் பணியில் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்ட நிலையில், டி.ஜி.பி.யின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

பதவி விலகும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் மக்களவை உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு வெளியிலிருந்த சில பாதுகாப்பு ஏற்பாடுகள் திரும்பப் பெறப்பட்டதையும் அவர் விளக்கினார்.