இந்தியா

Iran War| 18 இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியில் தவிப்பு- மத்திய அரசு தகவல்

இதுவரை இந்தியக் கொடி பொருத்திய 8 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்துள்ளன.

அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து எரிசக்தி ஏற்றுமதிக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.

இந்த ஜலசந்தியை கடந்து செல்ல இந்தியா உள்ளிட்ட சில நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்காக தங்கள் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஈரான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தது.

இந்த நிலையில் மேற்காசிய நிலவரம் குறித்து பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்தடங்கள் அமைச்சக சிறப்புச் செயலர் ராஜேஷ் சின்ஹா கூறியதாவது:-

கச்சா எண்ணெய் மற்றும் எல்.பி.ஜி.யுடன் இந்தியாவுக்கு வர வேண்டிய 18 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் தற்போது சிக்கித் தவிக்கின்றன.

இந்த 18 கப்பல்களில் 10 கப்பல்கள் வெளிநாட்டு கொடியும், 8 கப்பல்கள் இந்தியக் கொடியும் பொருத்தியவையாகும். இந்த கப்பல்களில் சுமார் 500 மாலுமிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

இந்தியக் கொடி பொருத்திய கப்பல்களை மீட்பதே நமது முன்னுரிமையாகும். மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.

வளைகுடா பகுதிகளில் இருந்து கொள்முதலுக்காக மீண்டும் கப்பல்களை அனுப்பத் தொடங்கும் நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை இந்தியக் கொடி பொருத்திய 8 கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து வந்துள்ளன. கடந்த 2 நாட்களில் மட்டும் 94 ஆயிரம் டன் எல்.பி.ஜி.யுடன் 2 கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவுக்கு இடையிலான ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் மொத்தம் 500 கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.