இந்தியா

டெல்லியில் ஓடும் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் 16 வயது பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

வீட்டில் பெற்றோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உறவினர் வீட்டிற்கு செல்லும்போது நிகழ்ந்த கொடூரம்.

டெல்லியில் ஸ்லீப்பர் பேருந்தில் (படுக்கை வசதி கொண்ட பேருந்து) 16 வயது மாணவி ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக.4ம் தேதி உத்தப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கருத்து வேறுபாடு காரணமாக, தனது குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி, நொய்டாவில் உள்ள தனது உறவினரைப் பார்க்கச் சென்றுள்ளார்.

அப்போது கனமழை மற்றும் இருள் காரணமாக கிரேட்டர் நொய்டாவில் பாரி சௌக் என்ற இடத்தில் இறங்கியுள்ளார். அப்போது இந்த படுக்கை வசதிக் கொண்ட பேருந்து காலியாக அப்பகுதி வழியாக சென்றுள்ளது.

கனமழையில் சிக்கிக்கொண்ட மாணவி உதவிக்காக சைகை காட்டி பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தும் நிறுத்தப்பட்டு, நொய்டா செக்டர்-63க்குச் செல்வதாகக் கூறி, ஓட்டுநரும் நடத்துநரும் மாணவியை ஏற்றிச் சென்றுள்ளனர்.

பேருந்தில் ஏறிய சிறிதுநேரத்திலேயே நடத்துநர் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். உடனே மாணவி கூச்சலிட அவரை கொலைசெய்து விடுவதாக மிரட்டி இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பின்னர் மாணவியை நள்ளிரவில் காஷ்மீர் கேட் பேருந்து முனையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அச்சமடைந்த மாணவி காஷ்மீர் கேட் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு புகாரித்துள்ளார்.

மாணவியின் புகாரை வைத்து விசாரணையைத் தொடங்கிய காவல்துறை திமர்பூரில் உள்ள ஒரு பேருந்து நிறுத்துமிடத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட படுக்கை வசதி கொண்ட பேருந்தையும் பறிமுதல் செய்து, தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அந்தப் பேருந்து பரி சௌக்கிலிருந்து காஷ்மீர் கேட் வரை சுமார் 47 கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளது. பேருந்தில் ஸ்கீரின் போடப்பட்டிருந்ததால் உள்ளே நடந்தவற்றை அவ்வழியே சென்றவர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் மாணவி கூச்சலிட்டதும் வெளியே சென்றவர்களுக்கு கேட்கவில்லை.

தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.