டெல்லியில் 16 வயது சிறுமி ஒருவரை மூன்று சிறார்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், சிறார்கள் உட்பட 19 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி ஸ்வரூப் நகரில் உள்ள குஷக் சாலைக்கு அருகில் உள்ள ஒரு வயல் பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக ஞாயிற்றுக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் வலது கை காணாமல் போயிருந்ததையும், முகம் மற்றும் வயிறு பகுதிகள் சிதைந்து இருந்ததையும் கண்டறிந்தனர்.
இதுகுறுத்து காவல்துறையினர் அதிகாரிகள் கூறுகையில், “சிறுமி இறந்து இரண்டு நாட்களே ஆகியிருந்தபோதிலும், அந்த உடல் மிக வேகமாக சிதைந்து கொண்டிருந்தது.
இது பெரும்பாலும் இயற்கை சீற்றங்களுக்கு உள்ளானதால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. சிறுமியின் முகத்தை அடையாளம் காண முடியவில்லை.
மருத்துவ அறிக்கை பாலியல் வன்புணர்வை உறுதி செய்ததுடன், அவரது உடலில் எட்டு இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உயிரிழந்த சிறுமி பலமுறை கத்தியால் குத்தப்பட்டிருந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கூடுதல் துணை காவல் ஆணையர் லோகேஸ்வரன் மற்றும் உதவி காவல் ஆணையர் ரவீந்தர் ஆகியோர் தலைமையிலான குழுவினர், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அப்போது சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டபோது, லாரி ஓட்டுநர் ஒருவரை விசாரணை செய்தனர். இதையடுத்து அந்த ஓட்டுநர் தனது 17 வயது தம்பி அந்த வாகனத்தை அடிக்கடி பயன்படுத்தி வருவதாக கூறினார்.
இதையடுத்து லாரியின் சிசிடிவி காட்சிகளை காவல் ஆணையர் ஷோபித் சக்ஸேனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அந்த லாரிக்குள் நான்கு சிறுவர்கள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து 19 வயதான சிவம் கணேஷ் மற்றும் 18 வயதுக்கு கீழ் இருந்த மூன்று சிறார்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.