இந்தியா

Accident | எஸ்.யூ.வி. மீது மோதிய பிக்கப் வாகனம்... 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு - பிரதமர் இரங்கல்

வாகனம் கவிழ்ந்து, எதிர்திசையில் வந்த ஒரு எஸ்.யூ.வி. மீது மோதியது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் தார் மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு, தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பிக்கப் வேன் கவிழ்ந்து எஸ்.யூ.வி. வாகனம் மீது மோதியதில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் இரவு 8:30 முதல் 9 மணி அளவில் நிகழ்ந்தது.

முதற்கட்ட தகவல்களின்படி, தார் மாவட்டம் பாகட் பகுதியில் இருந்து 35 தொழிலாளர்கள் ஒரு பிக்கப் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​சிக்லியா சந்திப்பு அருகே ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். வாகனம் கவிழ்ந்து, எதிர்திசையில் வந்த ஒரு எஸ்.யூ.வி. மீது மோதியது.

"12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்," என்று தார் மாவட்டப் பொறுப்பு ஆட்சியர் அபிஷேக் சௌத்ரி தெரிவித்தார். படுகாயமடைந்தவர்கள் முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு இந்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். திர்லா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து (PMNRF) தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.

"மத்திய பிரதேசத்தின் தார் பகுதியில் நடந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்," என்று பிரதமர் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார்.