அட்சய திரிதியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அமைந்துள்ள விற்பனை மையத்தில் தங்கம், வெள்ளி, செம்பு டாலர் விற்பனை களை கட்டியது. அட்சய திரிதியை நேரம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் திங்கட்கிழமை மதியம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று தங்க டாலர்கள் வாங்கினர். ஞாயிற்றுக்கிழமை ரூ.70 லட்சம் மதிப்பிலான டாலர்களும் திங்கட்கிழமை ரூ. 40 லட்சம் மதிப்பிலான டாலர்களும் விற்பனையானது.
கடந்த ஆண்டு, சுமார் ரூ. 90 லட்சம் மதிப்பிலான டாலர்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு, தங்கத்தின் விலை பெருமளவில் அதிகரித்த போதிலும், பக்தர்கள் தொடர்ந்து டாலர்களை வாங்கினர்.
திருப்பதி கோவிலில் நேற்று 80,084 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 28,929 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.3.69 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 6 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.