கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகின்றனர்.
மத்தியபிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பண்டா தாலுகா உள்ளது. இதன் அருகே உள்ள 4 கிராமத்தை சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனர். இதில் பலரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 11 பேர் பலியானார்கள். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் கவ்கர், நவ்ராஜ் மற்றும் பராஜ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். 4 கிராமங்களை சேர்ந்தவர்களிடமும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கள்ளச்சாராயம் விற்றவர்களை தேடி வருகிறார்கள். இதுகுறித்து மாநில அரசு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.