செய்திகள்

தொடக்க கல்வி அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசிய கொடி

குடியரசு தினத்தையொட்டி காரிமங்கலம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #RepublicDay

மாலை மலர்

காரிமங்கலம்:

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றிய தொடக்க கல்வி அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை உதவி தொடக்க கல்வி அலுவலர் ஏற்றினார். ஆனால் கொடி அரைகம்பத்தில் பறந்தது இதனை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மக்கள் கூறுகை‌யி‌ல் குடியரசு தினம் விழாவில் கொடி ஏற்றி மரியாதை செலுத்துவதில் எந்த ஒரு சர்ச்சைக்குரிய நிகழ்வும் நடைபெற கூடாது. ஆனால் படித்த அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபடுவது மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினர்.

இதேபோல் கெங்கு செட்டிபட்டி, கன்னிபட்டி யில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலை பள்ளியில் தேசியக் கொடியை ஏற்றி ஒரு மணி நேரத்துக்குள் கீழே இறக்கப்பட்டது. இது குறித்து ஊழியர்களிடம் கேட்ட போது மீண்டும் பள்ளிக்கு மாலை வரவேண்டும் என்பதால், கொடியை காலையிலேயே இறக்கி வைத்து விடுகிறோம் என்றனர்.

இதுகுறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்ட போது உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். #tamilnews #RepublicDay