செந்துறை:
திண்டுக்கல் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சரளைப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 36). அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யாவு மகன் கண்ணபிரான் (36). இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது.
சம்பவத்தன்று கண்ணபிரான் தனது தோட்டத்தில் வேலி அமைத்துள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணபிரான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சின்னத்துரையையும், அவரது 2 மகள்களான வசந்தி, அம்சவள்ளி ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.
பலத்த காயமடைந்த அவர்கள் 3 பேரும் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணபிரானை கைது செய்தனர்.