புதுச்சேரி:
நாளை ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
உலகின் மாபெரும் அவதார புருஷராக விளங்கும் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள மக்களால் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
குற்றம் ஏதும் புரியாத நிலையிலும் சிலுவையில் அறையப்பட்ட இயேசு பிரான், மரண வாயிலிலும் தன்னை தண்டித்தவர்களை மன்னிக்க கோரினார். மன்னிக்கும் குணம் மனிதர்களுக்கு தேவை என்பதை இதன் மூலம் உலகுக்கு உணர்த்தினார் இயேசு கிறிஸ்து.
அவ்வாறு பிறரை மன்னிப்பவர்கள், எதிரிகளையும் நேசிப்பவர்கள், பிறரிடத்து மாசற்ற அன்பு செலுத்துவோர் உலகில் மரணமிலா பெரு வாழ்வினை எய்துவர் என்பதனை இந்த ஈஸ்டர் திருநாள் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, மனிதர்களாகிய நாமும் இத்தகைய இறை குணங்களை நம்மை சுற்றி உள்ள அனைத்து ஜீவராசிகளிடத்தும் செலுத்தி நல்வாழ்வு வாழ வேண்டும். இத்தகைய வாழ்க்கை முறையை நாம் கடைபிடிக்கும் போது தான் நாட்டில் அமைதியும், சமாதானமும் பெருகி, வளர்ச்சிக்கு வழிபிறக்கும்.
கிறிஸ்தவ மக்களின் விரத காலம் முடிந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் இந்த தருணம் அவர்களின் வாழ்வில் இன்னொரு வசந்த காலத்தின் தொடக்கமாக இருக்க ஆண்டவரை பிரார்த்திக்கிறேன். இந்த நன்னாளில் புதுவை மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் என் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.