புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அதன் உபகோவிலான காட்டழகிய சிங்க பெருமாள் கோவிலுக்கு சென்று, லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுடெல்லியை போன்றது அல்ல. புதுடெல்லி தலைநகராக இருப்பதால் நிதி, நிலம், நிர்வாகம் ஆகியவற்றில் தலையிட துணை நிலை கவர்னருக்கு உரிமை உண்டு. புதுச்சேரியை பொறுத்த வரை சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு.
தமிழ்நாட்டில் நிர்வாகத்தில் தலையிட கவர்னருக்கு உரிமை இல்லை. எனவே ஆய்வு செய்வதற்கோ? உத்தரவு போடுவதற்கோ? தமிழ்நாட்டில் கவர்னருக்கு உரிமை இல்லை.
கவர்னர் முதல்-அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்திக்கலாம். ஆனால் நிர்வாக ரீதியாக சந்திக்க அதிகாரம் இல்லை. கோப்புகள் அமைச்சரவை மூலமாக அனுப்பப்படும்போது, அதை கவர்னர் முதல்முறை நிராகரிக்கும் பட்சத்தில், இரண்டாம் முறையாக அமைச்சரவை மீண்டும் பரிந்துரைத்து அனுப்பினால் அதில் கவர்னர் கையெழுத்திட வேண்டியது அவசியம்.
புதுச்சேரியில் கடந்த 1½ ஆண்டு காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி இருக்கிறது. எனவே புதுச்சேரியில் கவர்னர் பார்வையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை கருத்தில் கொண்டு, கிரண்பேடி செயல்பட வேண்டும்.
அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களின் விருப்பமும், புதுச்சேரி முதல்- மந்திரியான எனது விருப்பமும் ராகுல் காந்தி தலைவராக வேண்டும் என்பது தான். வருகிற 2019-ம் ஆண்டில் ராகுல் காந்தி பிரதமராவதற்கு வேண்டியவற்றை செய்ய இருக்கிறோம்.