புதுச்சேரி:
புதுவை அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த கையேடு வெளியிடுதல், ஐ.டி.ஐ. நிறுவனங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்குதல் மற்றும் ஐ.டி.ஐ மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வம்பாகீரப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடந்தது. தொழிலாளர்துறை ஆணையாளர் வல்லவன் வரவேற்றார்.
விழாவுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி கையேடு, தரச்சான்றிதழ்களை வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
அரசு நிறுவனங்களில் அனைவருக்கும் வேலை வாய்ப்பு அளிக்க முடியாது. தொழிற்சாலைகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்றுக்கொள்ளக்கூடியது.
புதுவையில் சுற்றுலா ஒரு தொழிலாக வளர்ந்து வருகிறது. வார இறுதியான 3 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதுவைக்கு வந்து செல்கின்றனர். ஓட்டலில் உள்ள அறைகள் நிரம்புகிறது. உணவு விடுதிகளில் வியாபாரம் நடக்கிறது. இதில் வேலை வாய்ப்பை உருவாக்கி, வேலைக்கு செல்ல பயிற்சி அளிக்க வேண்டும்.
கட்டுமான தொழில் உள்ளிட்ட பல பணிகள் உள்ளது. கிராமப்புற மாணவர்கள் தகுந்த பயிற்சி பெற்றால் தரமான நிறுவனங்களுக்கு பணிக்கு செல்ல முடியும். இதற்காக தொழிலாளர் துறை பல முன்னணி நிறுவனங்களோடு இணைந்து பயிற்சி அளித்து வருகிறது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது 60 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டோம். பிரதமர் மோடி 120 கோடி பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் பயிற்சி தொடர்பாக கருத்துக்களை பரிமாறி கொண்டனர். அப்போது அவர்கள் புதுவையில் படித்த என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்பு படித்த மாணவர்களை நேர்முகத்தேர்வில் பதில் சொல்ல முடியாததால் வேலை கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.
இதனால் தேவையான நிதி ஒதுக்கி படித்த இளைஞர்களுக்கு 4 மாதம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். இதன்மூலம் 8 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு முகாமிற்கு அனுப்பி 1,850 பேர் தொழில் நிறுவனங்களில் பணிக்கும் செல்ல வைத்துள்ளோம். இன்னும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் இதற்காக நிதி அளிக்கவும் தயாராக உள்ளது. அந்த அமைச்சகத்தில் இருந்து அதிகாரிகள் சமீபத்தில் பேசி சென்றுள்ளனர்.
தற்போது மகளிர் ஐ.டி.ஐ., நெட்டப்பாக்கம் ஐ.டி.ஐ.. ஐ.எஸ்.ஓ. தர சான்று வாங்கி உள்ளது. மீதியுள்ள 7 நிறுவனங்களும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வாங்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் அளிப்பதில்லை என்ற புகார்கள் வருகிறது. இதை தொழிலாளர்துறை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தையாவது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். இதை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், விஜயவேணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். #tamilnews