சென்னை:
டி.டி.வி.தினகரன் ஆதரவாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி. தனியாருக்கு சொந்தமான சொத்து. அதை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
அத்துமீறுவார்களா? அதிகார துஷ்பிரயோகம் செய்வார்களா? ஜெயா டி.வி. அலுவலகத்திற்கும், நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் அலுவலகத்திற்கும் அவர்கள் வந்து பார்க்கட்டும்?
தனியாருக்கு சொந்தமான இடத்தை அரசு அபகரிக்க முடியுமா? சராசரி மனிதனுக்கு இருக்கக் கூடிய அறிவு கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர் 420 என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர்களால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் எல்லாம் செல்லும். 21 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்து கவர்னரிடம் கடிதம் கொடுத்து இருக்கிறார்கள். அதை ஏற்று எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.
இந்த ஆட்சியை குருமூர்த்தி தான் இயக்குகிறார். அவரை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி அடிக்கடிசென்று ஆலோசனை நடத்துகிறார்கள். குருமூர்த்தி ஆலோசனைப்படிதான் இந்த அரசு இயங்குகிறது என்று எங்களுக்கு தகவல் வருகிறது.
தினகரனால் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் தங்கள் பணிகளை செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.
குட்கா விவாதம் தொடர்பாக கொண்டு வரப்படும் உரிமை மீறல் கூட்டம் நடக்காது. அந்த கூட்டத்தை கூட்டுவதற்கு இந்த அரசுக்கு உரிமை கிடையாது. காரணம் இந்த அரசுக்கு பெரும்பான்மை கிடையாது.
கவர்னருக்கு எல்லா விவரமும் தெரியும். அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.