செய்திகள்

மோடி செயலி தகவல்கள் சர்ச்சை - அமெரிக்க நிறுவனம் விளக்கம்

மோடி செயலி சர்ச்சை தொடர்பாக அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், தனது வலைப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

மாலை மலர்

வாஷிங்டன்:

பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியில் இருந்து பொதுமக்களின் தகவல்களை அமெரிக்க நிறுவனமான ‘கிளவர் டேப்’, சம்மந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி பெற்று, மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்படுவதாக பிரான்ஸ் சைபர் பாதுகாப்பு வல்லுனர் எலியட் ஆல்டர்சன் தகவல் வெளியிட்டார்.

‘பேஸ்புக்’ சர்ச்சை முடிவதற்குள், இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த ‘கிளவர் டேப்’ நிறுவனம், 3 இந்தியர்களால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தொடங்கி நடத்தப்படுவது ஆகும்.

தற்போது எழுந்து உள்ள மோடி செயலி சர்ச்சை தொடர்பாக, அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஆனந்த் ஜெயின், தனது வலைப்பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் ‘நமோ ஆப்’ பெயரை குறிப்பிடாமல், “தனிநபர் அந்தரங்கம், பாதுகாப்பு, கிளவர் டேப் போன்ற சேவை நிறுவனங்களின் பங்களிப்பு பற்றி விவாதங்கள் எழுந்து உள்ளன. வெளியீட்டாளர்களின் தகவல்களைப் பொறுத்தவரையில், அவற்றை கிளவர் டேப் நிறுவனம் விற்பதோ, பகிர்ந்துகொள்வதோ, மறு சந்தையிடுவதோ அல்லது வேடிக்கையாகவோ எதுவும் செய்வதில்லை” என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.