நாமக்கல்:
நாமக்கல் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் பிரகாசம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் பழனிசாமி, சுப்பிரமணியன், தொ.மு.ச. நிர்வாகிகள் செல்வம், தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பண்டிகை காலம் முன்பணம் வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுடன் பேசி உடனடியாக போனஸ் வழங்க வேண்டும். தினக் கூலி தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி போனஸ் வழங்கிட வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மேலும் 15 மாத டி.ஏ. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக சி.ஐ.டி.யு. மத்திய சங்கத்தலைவர் செந்தில்குமார் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். முடிவில் பொதுச்செயலாளர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.